திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் "இடியட்“ பட குழுவினர்

“இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது..,
இப்படம் முழுதுமே மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படத்திலும் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு ராம்பாலாவுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது...
‘தில்லுக்கு துட்டு’ படத்தின் போதே ராம்பாலாவை சந்தித்து வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர் ஞாபகம் வைத்து இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். இந்தபடத்தில் பங்குபெற்ற பெரிய நட்சத்திரங்கள் புதுமுகமான என்னை ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவுத்துகொள்கிறேன். இந்தப்படம் வித்தியாசமான காமெடி படமாக இருக்கும். முதலில் இரண்டு பாடல்கள் இருந்தது. இடையில் கதையில் சில மாற்றங்களை செய்ததால், ஒரு பாட்டை எடுத்து விட்டோம். இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒரு காமெடி காட்சி வந்தால் அடுத்து உடனே சீரியஸ் காட்சி வரும் படம் உங்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றார்.
நடிகர் ரவி மரியா பேசியதாவது...
ஒரு படத்தை பற்றி வழக்கமாக இந்தப்படம் சூப்பராக வந்திருக்கிறது, நடிக்கும்போதே ஹிட்டாகும் என்று தெரியும் என எப்போதும் சொல்வோம். ஆனால் இப்படத்தை பற்றி உண்மையிலேயே அப்படி சொல்லலாம். நான் வில்லன் சேரில் உட்கார்ந்து காமெடி செய்பவன், என்னை கூப்பிட்டு நீங்கள் காமெடி சேரில் அமர்ந்தே, காமெடி பண்ணுங்கள் என்று சொன்னார். ராம்பாலா எனக்கு பிடித்த படங்கள் செய்பவர். அவர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பில் காட்சிக்கு காட்சி கடுமையான உழைப்பை தருபவர் ராம்பாலா. ஷீட்டிங்கில் எல்லாவற்றையும் இறுதி நொடி வரை மாற்றிக்கொண்டே இருப்பார் படம் நன்றாக வரவேண்டும் என்கிற அக்கறை தான் அதற்கு காரணம். நடிகர் மிர்ச்சி சிவாவை இயக்க அவரிடம் கதை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்காமல் போனதே நன்று. ஏனெனில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன். மிக இயல்பாக இருக்கும் நல்ல மனிதர். நிக்கி கல்ராணி ஷீட்டிங்கில் என்னை பார்த்து தான் திட்டி பயிற்சி எடுப்பார். நல்ல நடிகை. மயில்சாமி நல்ல கதாப்பாத்திரம் செய்திருக்கிறார். ஒரு சின்ன அறைக்குள் அட்டகாசமாக லைட்டிங் செய்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜீ, ராம்பாலா சாருக்கு இந்தப்படம் கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றியை தரும். இப்படம் ஒரே ப்ரிவியூ ஷோவில் அனைத்து ஏரியாவும் விற்றுவிட்டது. சமீபத்தில் இது போல் சாதனை செய்த படம் இது மட்டுமே. இப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகர் RNR மனோகர் பேசியதாவது...
நீண்ட நாளுக்கு பிறகு சினிமா விழா, திரையரங்கில் நடப்பது மகிழ்ச்சி. ராம்பாலா கலகலப்பானவர், மிர்ச்சி சிவா காமெடியில் கலக்குபவர் இருவரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். Screen Scene Media Entertainment எத்தனை தடைகள் வந்தாலும் அதைத்தாண்டி சினிமாவை, திரையரங்குகளை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தை திரையரங்கில் வெளியிடுகிறது. தயாரிப்பாளரின் அந்த மனதிற்கு என் நன்றி.
நடிகர் மயில்சாமி பேசியதாவது...
இந்தப்படத்தை வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றி. முன்பெல்லாம் படம் 50 நாள், 100 நாள் விழா வைப்பார்கள். ஆனால் அது இப்போது நடப்பதில்லை ஆனால் சினிமா எந்த காலத்திலும் அழியாது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும். இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் எனக்கு கதை தெரியாது. ராம்பாலா என்னை அழைத்து, ஒரு காட்சியை சொல்லி நடிக்க சொன்னார். நடித்து முடித்தவுடன் நடிகன்யா நீ என என்னை பாராட்டினார். ஒரு காலத்தில் சினிமாவை விட்டே போக நினைத்தேன், ஆனால சிவக்குமார் இரு, உனக்கென்று ஒரு கதாப்பாத்திரம் கிடைக்கும் என்றார். அப்படி கிடைத்தது தான் குடிகாரன் கதாப்பாத்திரம். இப்போது எல்லா படங்களிலும் குடிகாரன் அல்லது சாமியார் கதாப்பாத்திரம் தான் வருகிறது. அது தான் என்னை வாழவைக்கிறது. ராம்பாலா லொள்ளு சபாவில் நிமிடத்திற்கு 10 பஞ்ச் அடித்து கலக்குபவர். லேட்டாக திரைக்கு வந்திருக்கிறார். ஆனால் கண்டிப்பாக தொடர்ந்து ஜெயிப்பார். இந்தப்படம் எல்லோருக்கும் பெயர் வாங்கி தரும் எனக்கும் பெயர் வாங்கி தரும்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது...
ராம்பாலா மிக நல்ல மனிதர். அவர் ஒரு காமெடி கடல். அவரின் திறமையை யாராலும் திருட முடியாது. அவருடன் தில்லுக்கு துட்டு படத்தில் இணைந்து பணியாற்றினேன். இரண்டில் நடிக்க முடியவில்லை. இப்போது இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்க்கொள்கிறேன். ஓடிடி யில் படத்தை கொடுத்துவிடும் இக்காலத்தில் தியேட்டரில் இப்படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்ததற்கு நன்றி. தியேட்டர் அனுபவம் என்பது மிகச்சிறப்பான ஒன்று அது ஆலயம் போன்றது. இந்தப்படம் அடுத்தவாரம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் கொண்டாடுவார்கள். மிர்ச்சி சிவா உடன் முதல்முறையாக நடித்திருக்கிறேன். அவர் படிப்படியாக வளர்ந்து முழு சந்திரமுகியாக மாறியிருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி என் தோழி அவரும் நானும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ஹிட். இந்தப்படமும் ஜெயிக்கும். இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்த மேடையில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிறு படங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவற்றை வாழ வைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
நாயகி நிக்கிகல்ராணி பேசியதாவது..
இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம்பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். இந்தப்படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது நான் இந்தபடக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது, சந்தோஷம். இப்படத்திற்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓடிடியில் மிக எளிமையாக விற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், தியேட்டரில் ரசிகர்கள் ரசிக்க வேண்டுமென, இப்போது தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏற்கனவே டார்லிங், மரகத நாணயம் படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் “இடியட்” படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.
இயக்குநர் ராம் பாலா பேசியதாவது...
“இடியட்” படத்திலேயே நிறைய கலகலப்பான சம்பவங்கள் நடந்தது. யார் யாரை இடியட் ஆக்கியுள்ளார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஒளிப்பதிவாளர் ராஜா, எடிட்டிங் முடித்து அவரது ஒளிப்பதைவை பார்த்து விட்டேன் நன்றாக செய்துள்ளார். மிர்ச்சி சிவா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி நிறைய கேள்வி கேட்பார், எல்லா லாஜிக்க்கும் அவருக்கு சொல்ல வேண்டும் மிகச்சிறப்பான நடிகை. நடிகர் ரவி மரியாவை முன்பிருந்தே தெரியும் அவரை வில்லனாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அவரது பாடி லாங்குவேஜ் அட்டகாசமாக இருக்கும். ஆனந்தராஜ் எனக்கு சீனியர் முரட்டுத்தனமான ஒரு ஆள் முட்டாள்தனமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தபோது அதற்கு பொருத்தமாக ஆனந்தராஜ் இருந்தார். ஊர்வசி மேடத்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறேன் இன்னும் பல படங்கள் செய்வேன். மயில்சாமி மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்த படத்தில் அவருக்கு ஃபாரின் மாப்பிள்ளை வேடம் தான். எனது உதவியாளர்கள் தான் இந்தப்படம் சரியாக உருவாக துணையாக இருந்தார்கள். சிவா காலையில் ஷூட்டிங்கிற்கு வரும்போதே, சிரித்து கொண்டே வருவார், முடிந்து செல்லும்போதும் அந்தப்புன்னகை அப்படியே இருக்கும். ஜனங்களை குஷிப்படுத்தும் படமாக சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கும்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது...
இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப்படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்வை கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும் ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை. நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார். மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர் தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி.