’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’- விமர்சனம்
- mediatalks001
- Nov 27, 2025
- 1 min read

கதையின் நாயகனான பரோட்டா முருகேசன் சிறு வயதில் கிணற்றில் விழுந்து உயிர் பிழைக்கும் தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்.
அவரது வேண்டுதல் நிறைவேறி விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கிறார். கிடாவும், வாலிப வயதில் மகனும் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போகிறது. காரணம், அந்த கிராமத்தில் இரண்டு பன்னாடிகளுக்குள் இருக்கும் பகைதான்.
இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்கேற்க வைக்க பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையே, பரோட்டா முருகேசனின் மகள் சித்ரா நடராஜனுக்கு பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். மறுபக்கம், அவரது மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு ஆட்டு கிடாயை விற்க முடிவு செய்கிறார்.
முடிவில் இரண்டு பன்னாடிகளின் ஒற்றுமையுடன் பரோட்டா முருகேசன், தனது வேண்டுதலை நிறைவேற்றிய காவல் தெய்வத்திற்கு தனது ஆட்டு கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா ? , என்பதை சொல்லும் படம்தான் ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.
நல்லபாடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக இயல்பான நடிப்பில் செருப்பு கூட அணியாமல் காடு, மேடுகளில் நடமாடி தனது கதாபாத்திரத்துடன் படம் முழுவதும் வாழ்கிறார். பரோட்டா முருகேசனுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அங்கீகாரத்தோடு, பல விருதுகளையும் பெற்றுத்தரும்.
பெரிய பன்னாடியாக நடித்திருக்கும் கார்த்திகேசன், சிறிய பன்னாடியாக நடித்திருக்கும் முருகன்,பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன், விகடன், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் நடராஜன் சங்கரனின் பின்னணி இசையும் ,
கிராமத்து வாழ்வியலுடன் ஒளிப்பதிவாளர் விமலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
\
மிக இயல்பான மனிதனின் கதையை அழகிய கிராமத்து வாழ்வியலான திரைக்கதை அமைப்பில் மிக சிறந்த படைப்பாக பார்ப்பவர்கள் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் சுகவனம்
ரேட்டிங் - 4 / 5





Comments