top of page

’மை லார்ட்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 15 hours ago
  • 2 min read

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர்  ராஜு முருகன் இயக்கத்தில்  ’மை லார்ட்’  


சசிகுமார்,  சைத்ரா ஜே.ஆச்சார் , ஆஷா சரத், குரு.சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், கோபி நயினார் , வசுமித்ரா ஆகியோர் நடித்துள்ளனர்  .


கோவில் பட்டியில் வள்ளலாரின் பக்தரான சசிகுமார் மனைவி சைத்ராவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சைத்ராவிற்கு உடலில் இரத்தப் போக்கு ஏற்படுவதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து அதற்கான செலவிற்காக கந்துவட்டியில் பணம் வாங்குகிறார் சசிகுமார்.


வாங்கிய பணத்தை கட்ட முடியாததால் சசிகுமார் மற்றும் அவருடைய மனைவி சைத்ராவின் கிட்னியை தருமாறு அந்த வட்டிக்காரர் சொல்கிறார் இதனைக் கேட்டு அதிர்ச்சியாகும் சசிகுமார் எதிர்பார்க்காத சிக்கலில் மாட்டி கொள்கிறார்.


மற்றொரு பக்கம் சென்னையில் வசிக்கும் மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடி வருகிறார். இதனையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற அவரது குடுமபத்தினர் முயற்சிக்கின்றனர். இதே சமயம் ஆஷா சரத் மக்களின் மத்தியில் தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்.


இச் சூழ்நிலையில் அரிதான இரத்தப் பிரிவை சார்ந்த ஆஷா சரத்துக்கு மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் ஆஷா சரத்தின் இரத்தப் பிரிவை சார்ந்த சசிகுமாரின் கிட்னி சரியாக இருப்பதை அறிந்து அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர அவரது உதவியாளர் முயற்சி செய்கிறார்.


இதனையடுத்து சசிகுமாருக்கு உதவி செய்வதாக கூறி ஆஷாசரத் உதவியாளர் சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவ மனையில் கிட்னி கொடுப்பதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை அறிந்துகொள்ளும் சசிக்குமார் தன் மனைவி சைத்ராவுடன் அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.


தப்பி சென்ற சசிக்குமாரையும் அவரது மனைவி சைத்ராவையும் சசிக்குமாரின் நண்பர் நியாயத்தை காப்பாற்ற நினைக்கும் பத்திரிக்கையாளர் குரு சோமசுந்தரம் காப்பாற்றி நீதிபதி ஜெயபிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்துக்கிறார் .


இறுதியில் மத்திய அமைச்சர் ஆஷாசரத்திற்கு திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடந்ததா? ஆஷா சரத்துக்கு சசிகுமார் தன்னுடைய கிட்னியை கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் 'மை லார்ட்' படத்தின் மீதிக்கதை.

முத்துச்சிற்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார் அப்பாவியான மனிதராக வாழ்ந்திருக்கிறார் . உடல் மொழியில் மனைவி மீது காட்டும் அன்பு, அனைத்து உயிர்கள் மேல் அன்பு வைக்கும் மனது, வெள்ளந்தி சிரிப்பு என இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார் சிறப்பான எதார்த்த நடிப்பின் முலம் குறிப்பாக சைத்ராவின் அப்பா ஆவி தன்னுள் புகுந்து கொண்டதாக சொல்லி அவர் செய்யும் அலப்பறையான காட்சிகள் ரசிக்க வைக்கிறது.


மிரட்டலான நடிப்பில் மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், நேர்மையான பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் ,நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.


ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.


கிட்னி திருட்டை மைய கதையாக வைத்து ஏழை எளிய மக்கள் பணக்கார வர்க்கத்திடம் ஏமாற்றப்படும் அவலத்தை திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்து எதிர்பார்க்காத திருப்பத்துடன் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page