‘டாக்ஸிக்’ - விமர்சனம்
- mediatalks001
- 1 hour ago
- 2 min read

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் சதாசிவா, பிரசாந்த் திலீப் ஹர்திகர் இணை தயாரிப்பில் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள படம் ‘டாக்ஸிக்’
ராக்கிங் ஸ்டார் யாஷ் ,நயன்தாரா ,கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி ,ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர் .
1947ஆம் ஆண்டு காலங்களில் நடைபெறும் கதையாக மிக பெரிய கேங்ஸ்டர்கள் கோவா மாநிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நேரத்தில் நாயகன் யாஷ் தன் சகோதரியான நயன்தாராவுடன் எதிரிகளை பந்தாடுகிறார்.
நாட்கள் கடந்து போகும் நிலையில் யாஷ் அதிகாரம் , பெண்கள் ,பணம் , மது போதை , வன்முறை என எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து வருகிறார் .
யாஷை கொல்வதற்கு எதிரிகள் சதி திட்டம் தீட்டும் நேரத்தில் அதிலிருந்து தப்பிக்கும் யாஷ் கியாரா அத்வானியை சந்திக்க அவரது அழகில் மயங்குகிறார் .
இந்நிலையில் நயன்தாராவுக்கு தன் தம்பி யாஷின் கட்டுப்பாட்டில் நகரம் முழுவதும் இருக்க வேண்டும் என ஆசைப்படும் நிலையில் எதிரிகளால் கொல்லப்படுகிறார்
நயன்தாராவின் மரணத்திற்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் யாஷ், சீனாவில் தனது கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார். பின்னர் மீண்டும் கோவா திரும்பும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவரது முதல் மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்து கொள்ள தனது 10 வயது மகனை யாஷ் கொலை செய்ய முயன்று பின்னர் அவனை விரட்டியடிக்கிறார்.
அதன்பிறகு கோவாவில் மீண்டும் கேங்ஸ்டராக இருக்கும் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரது சாம்ராஜ்யத்துக்கும் மகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
அந்த ஆபத்தை யாஷ் முறியடித்தாரா ?? தனது மகனையும் சாம்ராஜ்யத்தையும் யாஷ் காப்பாற்றினாரா? இல்லையா ?என்பதுதான் ‘டாக்ஸிக்’படத்தின் மீதிக்கதை.
நாயகனாக தந்தை -மகன் வேடங்களில் நடித்திருக்கும் யாஷ் ஸ்டைலிஷ் நாயகனாக விதவிதமான மேல்நாட்டு ஆடைகளை அணிந்துக் கொண்டு, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, மது அருந்துவது, வன்முறையில் அதிரடியாக இறங்குவது என ஆக்ஷன் நாயகனாக தன் கதாபாத்திரத்தை நடிப்பில் பூர்த்தி செய்கிறார் .
யாஷின் சகோதரியாக நடித்திருக்கும் நயன்தாரா கதைகேற்றபடி அமைதியாக நடிக்கிறார் .
யாஷின் காதலியாக நடித்திருக்கும் தாரா சுதாரியா, வில்லியாக நடித்திருக்கும் ஹுமா குரேஷி முதல் மனைவியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், என நாயகிகளாக நடித்திருப்பவர்கள் நடிப்பை விட கவர்ச்சியான உடையில் ரசிகர்களை ஏங்க வைக்கின்றனர் .
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியின் பிரமாண்ட ஒளிப்பதிவில் 1947 – 1970 காலக்கட்டங்கள் வண்ணமயமாக பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்களுடன் பின்னணி இசை கூடுதல் பலம் .
கேங்ஸ்டரின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறை காட்சிகளுக்கும் , பெண்களுடன் ஆபாசக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பிரம்மாண்டமான காட்சிகள் பிரமிக்க வைத்தாலும் ஆக்ஷனுடன் வலுவில்லாத கதையில் அழுத்தமில்லாத திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கீது மோகன்தாஸ்
மொத்தத்தில் ‘டாக்ஸிக்’ வன்முறை கலாச்சாரம்
ரேட்டிங் - 2.5 / 5





Comments