top of page

உழவு தொழில் செய்வோருக்கு அங்கீகாரம் கொடுத்த நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் !

  • mediatalks001
  • Jan 12, 2025
  • 2 min read

5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி


கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.


விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.


மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது.


இதில்


• சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்திக்கும்


• நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளாவுக்கும்


• மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது - கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும்

• கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு. விஜயகுமாருக்கும்


• சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்புக்கான விருது - நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்து.

இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது, “இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை,

குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.


"இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்" என்றார்.


மேலும் கார்த்தி அவர்கள் பேசுகையில் "பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை பற்றி நினைக்காமல், எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் "என்றும் கேட்டுக் கொண்டார்.


சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, "கார்த்தி இப்படியொரு விஷயத்தை செய்வதே பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சுயமாக வீட்டில் செடி வளர்ப்போம், தோட்டம் அமைப்போம். அதைப்பற்றி பெருமையாக பேசிக் கொள்வோம். இதை ஒரு பெரிய திட்டமாக உருவாக்கி, நிறைய பேருக்கு அங்கீகாரம் கொடுப்பதோடு, உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக உழவர்களுக்கு நிறைய உதவி செய்து வருவதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக சேவை இதை தொடர்ந்து கார்த்தி செய்யறத நினைத்து பெருமையாக இருக்கிறது". என்றார்


நடிகர் அரவிந்த் சாமி பேசும் போது, "நான் எனது 15 வயது வரை அப்பா, அம்மாவுடன் நசரத்பேட்டையில் உள்ள தோட்டத்தில்தான் தான் வசித்து வந்தேன்.


நானும் சிறு வயதில் விவசாயத்தில் இருந்ததால் விவசாயிகளின் கஷ்டம் எனக்கும் புரியும். அவர்களை கெளரவிக்கும் இப்படி ஒரு விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.


இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, "இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," இந்த விழாவில் கலந்துக் கொண்டதே பெருமையாக இருக்கு" என்று கூறினார்.


இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் ‘கார்த்தியின் உழவர் திருநாள்’ விழா, ஜனவரி 14, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page