top of page

‘ஹனு-மான்’-விமர்சனம் ஹாலிவுட் பட ஸ்டைலில் அனைவரும் ரசிக்கும் ஆன்மீகம் கலந்த 'அம்புலி மாமா' கதை




கிராமத்தில் அக்கா வரலக்ஷ்மி சரத்குமாருடன் வாழும் நாயகன் தேஜா சஜ்ஜா ஜாலியான சிறு சிறு திருட்டுகள் செய்து எந்த வேலையும் செய்யாமலே ஊரை சுற்றுகிறார் .

கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி கிராமத்து மக்களிடம் வரி வாங்கி கொண்டு ஊரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறார் . யாராவது எதிர்த்து பேசினால் மல்யுத்த போட்டி மூலம் எதிர்ப்பவரை கொல்வது அவரது வழக்கமான பார்முலா .

இந்நிலையில் மருத்துவராக கிராமத்துக்கு வருகிறார் தேஜா சஜ்ஜாவின் பள்ளி பருவ காதலி அமிர்தா ஐயர் .

ஒரு கட்டத்தில் அமிர்தா ஐயரை கொள்ளையர்கள் தாக்க அவரை காப்பாற்ற தேஜா சஜ்ஜா அவர்களிடம் போராடும்போது கொள்ளையர்கள் தாக்கியதில் மயக்கமான நிலையில் இருக்கும் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல்லான ருத்ர கல் ஒன்று கிடைக்கிறது. சூரிய சக்தியால் அந்த கல்லில் மூலம் சக்தியில் மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டியை அடித்து பந்தாடி கிராம மக்களை காப்பாற்றுகிறார் .

ருத்ர கல்லின் சக்தியை தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய். கல்லுடன் சேர்த்து மாபெரும் சக்தியை கைப்பற்ற தேஜா சஜ்ஜாவை அவர் இருக்கும் இடம் தேடி வருகிறார்.

முடிவில் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்திவாய்ந்த ருத்ர கல்கிடைத்ததற்கான காரணம் என்ன ?

தேஜா சஜ்ஜாவிடமிருந்து ருத்ர கல்லை கைப்பற்ற நினைத்த வினய்யின் சதி திட்டம் பலித்ததா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஹனு-மான்’.


நாயகனாக நடிக்கும் தேஜா சஜ்ஜா துறுதுறு இளைஞனாக ஹனுமந்து கதாபாத்திரத்திரமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் சக்தி கொண்ட சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ஜொலிக்கிறார் .

ருத்ர கல்லின் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்களை காமெடி கலந்த நடிப்பில் தெலுங்கு ஹீரோக்கள் படங்களில் செய்வதை சொல்லும்போது முடிவில் தெலுங்கு ஸ்டார் பாலகிருஷ்ணாவை போல ரயிலை நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் விசிலினால் தியேட்டரே அதிர்கிறது.

நாயகியாக நடிக்கும் அமிர்தா ஐயர் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .

அக்காவாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் ,ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டும் வினய் ராய்,கிராமத்து தலைவராக பயமுறுத்தும் ராஜ் தீபக் ஷெட்டி, சிரிக்க வைக்கும் வெண்ணிலா கிஷோர் , சமுத்திரக்கனி என நடித்த நடிகர்கள் நடிப்பில் இயல்பாக நடிக்கின்றனர் .

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையும் ,ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவும்,சாய் பாபு தலாரியின் பட தொகுப்பும் படத்திற்கு பக்க பலமாய் இருக்கின்றது .


ஒரு கிராமத்தில் நாயகனுக்கு சக்தி கிடைத்த பின் அந்த சக்தியினால் சூப்பர் ஹீரோவாக உருமாறி அவர் நிகழ்த்தும் சாகசங்களை கதையாக கொண்டு ஆன்மிகம் கலந்த விறு விறுப்பான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் அனைவரும் சிரித்து மகிழ பேசிக்கொண்டே குரங்கு வரும் காட்சிகளும் ஹாலிவுட் பட பாணியில் வடிவமைக்கப்பட்ட சிறப்பான காட்சிகளுடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.


ரேட்டிங் ; 3 .5 / 5


ஹாலிவுட் பட ஸ்டைலில் அனைவரும் ரசிக்கும் ஆன்மீகம் கலந்த 'அம்புலி மாமா' கதை .

bottom of page