‘ஜாக்கி’ - விமர்சனம்
- mediatalks001
- 3 days ago
- 2 min read

பிகே 7 ஸ்டுடியோஸ் எல்.எல்.பி – பிரேமா கிருஷ்ணதாஸ், சி.தேவதாஸ், ஜெயா தேவதாஸ் , இயக்குநர் டாக்டர் பிரகாபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் , அம்மு அபிராமி, மதுசூதன் ராவ், காளி, சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் கணேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜாக்கி’ .
மதுரையில் ஷேர் ஆட்டோ டிரைவரான யுவன் கிருஷ்ணா முழு ஈடுபாடுடன் கிடா சண்டையில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதற்காக நாயகன் யுவன் கிருஷ்ணா காளி என்ற கிடாவை வளர்த்து வருகிறார்.
அதேசமயம் வில்லனான ரிதன் கிருஷ்ணாவும் கிடா சண்டை மீது ஆர்வமாக இருப்பதில் மட்டுமல்லாமல் அதில் வெற்றி பெறுவது கௌரவம் என்று நினைக்கிறார்.காரணம் கிடா போட்டியில் வெற்றி பெற்றால் ‘ஜாக்கி’ என்ற பதக்கத்தால் கிடைக்கும் கௌரவமே முக்கியமானதாகும்.
இந்நிலையில் தனது ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் நாயகி அம்மு அபிராமியை பார்த்ததும் காதல் கொள்கிறார் நாயகன் யுவன் கிருஷ்ணா. நாளடைவில் இருவரும் காதலிக்கிறார்கள்.
இதற்கிடையில் ஒரு கிடா சண்டையில் யுவன் கிருஷ்ணாவின் கிடா ரிதன் கிருஷ்ணாஸின் கிடாயை முட்டி கொம்பை உடைத்து வீழ்த்தி விடுகிறது.
அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது.
கிடா சண்டையால் ஆரம்பித்த மோதல் இரு தரப்புக்கும் இடையே வெட்டு குத்து வரை செல்கிறது.
ஒரு கட்டத்தில் ரிதன் கிருஷ்ணாஸ், தன் ஆட்களுடன் யுவன் கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சேதப்படுத்தி வருகிறார்.
இதனால் கோபமடைந்த யுவன் கிருஷ்ணா ரிதன் கிருஷ்ணாஸை தேடிச்சென்று சண்டையிடும் போது அந்த இடத்தில் இருக்கும் ரிதன் கிருஷ்ணாஸின் உறவினரான மதுசூதனனும், ஊர் பெரியவர்களும் கிடா சண்டையில் ஆரம்பித்த பிரச்சனையை கிடா சண்டையை வைத்தே இருவருக்கும் இடையே உள்ள பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்க்கிறார்கள்.
இறுதியில் கிடா போட்டியில் வெற்றி பெற்று ‘ஜாக்கி’ பதக்கத்தை கைப்பற்றியது நாயகன் யுவன் கிருஷ்ணாவா? அல்லது வில்லனான ரிதன் கிருஷ்ணாஸா என்பதுதான் ‘ஜாக்கி’ படத்தின் மீதிக்கதை..
நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருப்பதோடு தான் வளர்க்கும் கிடா மேல் காட்டும் அன்பு , அக்கறை, பயிற்சி என உணர்வுப்பூர்வமான நடிப்பிலும் மறுபக்கம் அம்மு அபிராமி உடனான காதல் காட்சிகளிலும் திறமையாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக ரிதன் கிருஷ்ணாஸ் அசத்தலான நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி இயல்பான நடிப்பில் அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையும் , ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
கிடா சண்டை அதன் மூலம் உருவாகும் பகை, ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையில் காதல், செண்டிமெண்ட்,கிடா சண்டை போட்டிகள் என மதுரை மண்ணின் வாழ்வியலுடன் ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர்.பிரகாபல்.
ரேட்டிங் - 3.4 / 5








Comments