top of page

தேசிய அரசியலில் களம் இறங்கும் மன்சூரலிகானின் 'இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம்'


இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் மூலம் தேசிய அரசியலில் இறங்கும் மன்சூர் அலிகான்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வரும் மன்சூர் அலிகான், சமூக செயல்பாடுகளிலும், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து பயணித்தவர் தற்போது ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற அமைப்பின் மூலம் தேசிய அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசுத் தினமான இன்று வெளியிட்டுள்ளார்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய இந்த அமைப்பை தற்போது தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்காக இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்று மாற்றியிருக்கிறேன். இதற்கான தொடக்கம் சுதந்திர தின நாளில் தொடங்கியிருக்கிறேன். எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம். இதற்காக இந்தியா முழுவதில் இருந்தும் நாங்கள் பொறுப்பாளர்களை நியக்க உள்ளோம், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.

மற்றவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதை பார்த்து பார்த்து பெரும் பசியில் இருக்கிறோம், அதனால் எங்களுடைய அரசியல் இனி தீவிரமாக இருக்கும். அதேபோல் தடலாடியான பதவிகளும் வழங்கப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம் என்பது குறித்து எங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம். அந்த முடிவை விரைவில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநாட்டில் அறிவிப்போம்.

எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம், எங்கள் ஒரே நோக்கம் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் பதவியும், ஆட்சி அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதோடு, பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக அவருடைய வழியிலும் தீவிரமாக பயணிப்போம்.” என்றார்.

முன்னதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி குடியரசு மக்களுக்கு இனிப்பு வழங்கு குடியரசு தினத்தை நடிகர் மன்சூர் அலிகான் கொண்டாடினார்.

bottom of page